மொராக்கோவிலிருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் செயுட்டாவிற்குள் நுழைவு – ஸ்பெயின் ராணுவம் களமிறக்கம்!
மொராக்கோவிலிருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் கடல் வழியாகவும் எல்லை வழியாகவும் ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செயுட்டாவிற்குள் நுழைந்துள்ளனர். இதையடுத்து, எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்த ஸ்பெயின் ராணுவம் அனுப்பப்பட்டுள்ளதுடன், நிலைமையை தேசிய மனிதாபிமான அவசரநிலையாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மொராக்கோவிலிருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செயுட்டாவிற்குள் திடீரென நுழைந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்டோர் செயுட்டாவை அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில ஸ்பெயின் ஊடகங்கள் வியாழக்கிழமை மட்டும் 2,000 முதல் 3,000 பேர் வரை நுழைந்திருக்கலாம் என மதிப்பிட்டுள்ளன.
புலம்பெயர்ந்தோர் கடல் வழியாக நீந்தியும், காற்றடைத்த வளையங்கள் மற்றும் மிதக்கும் உபகரணங்களைப் பயன்படுத்தியும் எல்லையை கடந்துள்ளனர். மேலும் சிலர் எல்லை வேலியில் உள்ள கதவு வழியாக செயுட்டாவிற்குள் ஓடிச் சென்றதாக வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன.
இந்த நிலைமையை "தேசிய மனிதாபிமான அவசரநிலை" என செயுட்டா நிர்வாகம் அறிவித்துள்ளது. எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த ஸ்பெயின் ராணுவப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன.
செயுட்டா மற்றும் மெலில்லா ஆகியவை ஆப்பிரிக்காவுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உள்ள ஒரே நில எல்லைப் பகுதிகளாக இருப்பதால், ஐரோப்பாவை அடைய முயலும் புலம்பெயர்ந்தோரின் முக்கிய நுழைவாயில்களாக நீண்ட காலமாக இருந்து வருகின்றன.
இந்த மாத தொடக்கத்தில் செயுட்டா அல்லது மெலில்லாவை அடைய முயலும் போது இடைமறிக்கப்படும் புலம்பெயர்ந்தோரை உடனடியாக மொராக்கோவிற்கு திருப்பி அனுப்ப முடியாது என ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை மனிதக் கடத்தல் வலையமைப்புகள் பயன்படுத்தி சட்டவிரோத குடியேற்றத்தை ஊக்குவிப்பதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கிடையில், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் செயுட்டாவிற்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்யவுள்ளதாகவும், விரைவில் இயல்பு நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.