மதுபோதையில் தண்டவாளத்தில் உறங்கிய முதியவர் தொடருந்தில் சிக்கி படுகாயம்
திருகோணமலையில் மதுபோதையில் தொடருந்து தண்டவாளத்தில் உறங்கியிருந்த 65 வயதுடைய முதியவர் ஒருவர் தொடருந்தில் மோதி படுகாயமடைந்தார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருகோணமலையில் நேற்று (26.07.2026) இரவு இடம்பெற்ற விபத்தில், மதுபோதையில் தொடருந்து தண்டவாளத்தில் கால்களை வைத்து உறங்கிக் கொண்டிருந்த 65 வயதுடைய எம். ராஸிக் என்ற முதியவர், திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்தில் மோதி படுகாயமடைந்துள்ளார்.
விபத்தையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.