முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு
2008ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், சந்தேகநபருக்கு உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்துள்ளது. வழக்கு டிசம்பர் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், சந்தேகநபர் ஒருவருக்குத் தலைமறைவாக இருக்க உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைக்கு தாம் குற்றமற்றவர் என அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் வசந்த அமரசேன உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பில் சட்டத்தரணிகள் அச்சலா செனெவிரத்ன மற்றும் ஆதம்லெப்பை ஆஸாத் ஆகியோர் ஆஜராகினர். வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.