ஈரான் மீது அமெரிக்காவின் சக்திவாய்ந்த பதிலடி தாக்குதல் – மத்திய கிழக்கில் போர் தீவிரம்
மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்கள் மற்றும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் மீது சக்திவாய்ந்த பதிலடி தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. இதனால் பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த கப்பல்கள் மீது ஈரான் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்கா ஈரான் மீது சக்திவாய்ந்த இராணுவத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.
இதனுடன், ஈராக்கில் செயல்படும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா இணைந்து மேற்கொண்ட பகிரங்க இராணுவத் தாக்குதல்களின் பின்னர், மத்திய கிழக்கில் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தபோது, இந்தப் போர் சில வாரங்களிலேயே முடிவடையும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இருப்பினும், எதிர்பார்ப்புக்கு மாறாக பல மாதங்களாக இந்தப் போர் தொடர்ந்துவருவதால், பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்து உலக நாடுகள் கவலை வெளியிட்டு வருகின்றன.