கசிப்பு நிலையத்தை முற்றுகையிடச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் – இருவர் படுகாயம்
மட்டக்களப்பு – வெல்லாவெளி 35ஆம் கொலனி பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிடச் சென்ற பொலிஸார் மீது பெண்கள் உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரு பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு – வெல்லாவெளி 35ஆம் கொலனி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸார் மீது பெண்கள் உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று (06) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான 7 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர், கிடைத்த தகவலின் அடிப்படையில் இரவு 7 மணியளவில் குறித்த இடத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களின் உறவினர்கள் எனக் கூறப்படும் குழுவினர் பொல்லுகளால் பொலிஸாரை தாக்கி, முற்றுகை நடவடிக்கையை தடுக்க முயன்றுள்ளனர்.
தாக்குதலில் இரு பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொலிஸார் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து மேலதிக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலில் ஈடுபட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.