வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு விரைவில் நட்டஈடு – அரசாங்கம் நடவடிக்கை
வறட்சியால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள மொனராகலை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகளுக்கு விரைவாக நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை 6,073 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.
நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு விரைவாக நட்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விவசாய அமைச்சர் கே.டீ. லால் காந்தவின் அறிவுறுத்தலின் பேரில், விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபை இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. மொனராகலை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் இதுவரை 6,073 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 4,707 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவாகியுள்ளது.
சேதமடைந்த பயிர்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட நெல், சோளம் உள்ளிட்ட 6 வகையான பயிர்களுக்கு ஒரு ஹெக்டேயருக்கு அதிகபட்சமாக 100,000 ரூபாய், அதிகபட்சம் 5 ஏக்கர் வரையிலான நிலப்பரப்புக்கு அரசாங்கத்தினால் நட்டஈடு வழங்கப்படவுள்ளது.
பயிர்கள் சேதமடைந்த விவசாயிகள் விவசாய காப்பீட்டுச் சபையின் கள அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கலாம் அல்லது விவசாய அபிவிருத்தி மையங்களில் உள்ள சேத அறிவிப்புப் பதிவேட்டில் பதிவுசெய்யலாம். மேலதிக தகவல்களுக்கு 1918 என்ற குறுஞ்செய்தி மற்றும் அழைப்பு இலக்கத்தை தொடர்புகொள்ளலாம்.