செல்பி எடுக்க முயன்ற துருக்கி யுவதி ரயிலிலிருந்து தவறி விழுந்து படுகாயம்!
நானுஓயாவிலிருந்து பதுளை ரயில் பயணத்தின் போது செல்பி எடுக்க முயன்ற துருக்கி நாட்டைச் சேர்ந்த யுவதி ஒருவர் அம்பேவளை பகுதியில் ரயிலிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த ரயிலில் இன்று (19) முற்பகல் இடம்பெற்ற விபத்தில், துருக்கி நாட்டைச் சேர்ந்த யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அம்பேவளை பகுதியில் ரயில் பயணித்துக் கொண்டிருந்தபோது, செல்பி படம் எடுக்க முயன்ற அவர் சமநிலையை இழந்து ரயிலிலிருந்து தவறி விழுந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் மேலும் இரு துருக்கி யுவதிகளும் அதே ரயிலில் பயணித்திருந்ததாக கூறப்படுகிறது.
விபத்தில் பலத்த காயமடைந்த யுவதி முதலில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சை தேவையென கருதப்பட்டதால், கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பயணத்தின் போது ரயில் கதவுகள் மற்றும் ஜன்னல்களுக்கு அருகில் நின்று செல்பி எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களை தவிர்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.