FBC பரிசோதனைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!
வவுனியாவில் முழுமையான இரத்தப் பரிசோதனை (FBC)க்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு, நீதிமன்றம் ரூ.5 இலட்சம் அபராதம் விதித்துள்ளது.
வவுனியா பகுதியில் இயங்கி வரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில், முழுமையான இரத்தப் பரிசோதனை (FBC)க்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக தொகை நோயாளிகளிடம் வசூலிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட வைத்தியசாலைக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறித்த தனியார் வைத்தியசாலை கட்டுப்பாட்டு விலையை மீறி கட்டணம் வசூலித்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ரூ.5 இலட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, கட்டுப்பாட்டு விலைகளை மீறி சேவைக்கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.